தாட்கோ திட்டத்தில் சிமென்ட் கழக விற்பனை முகவருக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், மே 4: காஞ்சிபுரத்தில் தாட்கோ திட்டத்தின் மூலமாக தொழில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில், சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவர் பணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில், தமிழ்நாடு சிமென்ட் விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில், 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ₹2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ₹3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

மேலும், இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com. என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தாட்கோ திட்டத்தில் சிமென்ட் கழக விற்பனை முகவருக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: