தஞ்சாவூரிலிருந்து கிருஷ்ணகிரி, தென்காசிக்கு 3000 டன் நெல் மூட்டைகள்

தஞ்சாவூர், ஏப்.12: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 3000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் கிருஷ்ணகிரி, தென்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும். இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

இந்தநிலையில் நேற்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 3000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2000 டன் நெல் 42 வேகன்களிலும் மற்றும் கும்பகோணத்தில் இருந்து தென்காசிக்கு 1000 டன் நெல் மூட்டைகள் 21 வேகன்களில் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

The post தஞ்சாவூரிலிருந்து கிருஷ்ணகிரி, தென்காசிக்கு 3000 டன் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Related Stories: