சேலம் மாநாட்டிற்கு பச்சை துண்டு அணிந்து வர வேண்டும்

திருச்சி, டிச.3: சேலத்தில் வரும் 17ம்தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு பச்சை துண்டு அணிந்து வர வேண்டும் என்று திமுக விவசாய அணியினருக்கு அறிவுறுத்தி உள்ளனர். திமுக விவசாய அணி மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நகர, மாநகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில், சேலத்தில் வரும் 17ம் தேதி இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மாநாட்டையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் திமுக விவசாய அணி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாய அணியை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாநாட்டுக்கு வருகை தரும் விவசாய அணியை சேர்ந்த அனைவரும் பச்சைத்துண்டு கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post சேலம் மாநாட்டிற்கு பச்சை துண்டு அணிந்து வர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: