சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

நெல்லை, ஜூலை 7: தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், ராசா அருண்மொழி துணைத்தலைவராகவும் கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள், 18 முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்) வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை விரைவில் புதுப்பித்துக் கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: