குடந்தை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயில்

 

தஞ்சாவூர்: சென்னைக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை தஞ்சாவூரில் எம்.பி. முரசொலி தலைமையில் ஏராமானோர் உற்சாகமாக வரவேற்றனர். தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தஞ்சாவூர் எம்.பி., முரசொலி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்து இருந்தது.

இந்த ரயில் திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு 6.25 க்கு வந்தடையும். தொடர்ந்து ரயில் கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12 .10 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 க்கு தஞ்சாவூர் வந்தடையும் வகையில் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆயுத பூஜையான நேற்று முன் தினம் திருச்சியிலிருந்து இயக்கப்பட்ட ரயில் தஞ்சாவூருக்கு 6.25 க்கு வந்தடைந்தது. இந்த ரயிலை தஞ்சாவூர் எம்.பி முரசொலி உள்ளிட்ட ஏராளமான ரயில் பயணிகள் உற்சாகமாக வரவேற்றனர்.பின்னர் ரயில் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த ரயில் சேவை திங்கள், வியாழன் தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

The post குடந்தை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயில் appeared first on Dinakaran.

Related Stories: