அரிய வகை ரத்த சிவப்பணுக்களை சேமித்து வைக்க ரூ.375 லட்சம் செலவில் உறை நிலை சேமிப்பு அலகு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள, தேசிய தன்னார்வ ரத்ததான நாள் செய்தி: மனித உயிரை காப்பாற்றும் உயரிய செயலான தன்னார்வ ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்ததான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்ததான நாளின் கருப்பொருள் ‘உயிர் காக்கும் உதிர தானம்’ என்பதாகும். தன்னார்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது.  ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது.ரத்ததானத்தின்போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்ததானம் செய்த பின் 24 மணி நேரத்திற்குள்ளாக நம் உடல் இழந்த ரத்தத்தை ஈடுசெய்துவிடுகிறது. ரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.  அரசு ரத்த வங்கிகள் மற்றும் ரத்ததான முகாம்களில் ரத்ததானம் செய்யலாம். ஆண்டுதோறும் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ரத்ததான முகாம் அமைப்பாளர்களை, தமிழ்நாடு அரசு  பாராட்டி சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய இந்தியா @75 என்ற தலைப்பில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஓவியப்போட்டியும் மற்றும் இணையதள வினாடி வினாப்போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. ரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தினை ரத்த மையங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக சேமிக்க, ரூ.175 லட்சம் செலவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அதிநவீன 5 நடமாடும் ரத்த சேமிப்பு ஊர்திகள் வழங்கப்பட உள்ளது. அரிய வகை ரத்த சிவப்பணுக்களை 10 ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வைக்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.375 லட்சம் செலவில் உறை நிலை சேமிப்பு அலகு அமைக்கப்பட உள்ளது. மேலும் ரத்தப் பைகளை கண்காணிக்க ரூ.208 லட்சம் செலவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கதிரியக்க அலைவீச்சு கருவி பொருத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு அரசு, தனியார் ரத்த வங்கிகள் மூலம் 90 விழுக்காடு ரத்தம் சேகரிக்கப்பட்டது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிடவும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post அரிய வகை ரத்த சிவப்பணுக்களை சேமித்து வைக்க ரூ.375 லட்சம் செலவில் உறை நிலை சேமிப்பு அலகு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: