அரியலூரில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் கோயில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: கலெக்டர் தகவல்

அரியலூர், ஏப்.11: அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் கோயில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,462 சிறிய மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. இதில் 8 கோயில்களில் மதிய அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கால பூஜை 261 கோயில்களில் நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில், திருமழபாடி வைத்தியாத சுவாமி கோயில், காமரசவல்லி சௌந்தரேஸ்வரர் கோயில், அரியலூர் ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி கோயில், கீழையூர் அகத்தீஸ்வரர் கோயில், உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் முதலமைச்சர் பொறுப்பேற்ற கடந்த இரண்டாண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்திலும் கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் கோயில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 186 கோயில்களில் பணிபுரியும் 186 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுடன் கோயில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தின்கீழ் ஓய்வூபெற்ற இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் 24 நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 42 கோயில்களில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும், கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்று கோயில் பணியாளர்களுக்கு 2 சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் கோயில்களில் பணிபுரியும் 26 ஆண் பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பணியாளர் என மொத்தம் 27 பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு 4.12.2022 அன்று சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட ஏழை, எளிய இணைகளுக்கு கோயில்களில் இலவசத் திருமணம் நடத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது,

இத்திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோவிலில் 1 இணைகளுக்கும், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில் 1 இணைகளுக்கும், செந்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் 1 இணைகளுக்கும் என மொத்தம் 3 ஏழை, எளிய இணைகளுக்கு இலவசத் திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 23 .02.2023 அன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே, கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு ரூ.20,000 செலவிடப்பட்டு வந்தது. தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இத்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏழை, எளிய இணைகளுக்கான இலவசத் திருமணத் திட்டத்தால் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனை ஏழை, எளிய பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

The post அரியலூரில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் கோயில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: