வீடுபுகுந்து மனைவி, குழந்தைகள் உட்பட 6 பேரை வெட்டிக்கொன்று காரில் தப்பிய சைக்கோ எங்கே?

*துப்பு கொடுப்போருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிப்பு

திருமலை : தெலங்கானாவில் மனைவி, குழந்தைகள் உட்பட 6 பேரை வெட்டிக்கொன்றுவிட்டு காரில் தப்பிய சைக்கோ வாலிபரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அவர் குறித்து துப்பு ெகாடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாபாத் மண்டலம் தைவாலகுடாவை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). மதுபோதைக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு பல லட்சம் பணத்தை இழந்தாராம்.

இதற்காக ரூ.1 கோடிக்கு மேலாக கடன்வாங்கி வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த தன்னை விட வயது மூத்தவரான சரிதா (32) என்பவரை ஒரு தலையாக காதலித்தார்.

இதையறிந்த சரிதாவின் பெற்றோர் வேறு இடத்தில் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்தனர். இருப்பினும் அதனை தடுத்துவிட்டு அதே ஆண்டில் ராஜ்குமார் சரிதாவை திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு பரீட்சித் (4), தைவிக்சித் (2) என 2 மகன்கள் இருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். மேலும் அந்த சிறுமியின் தந்தைக்கு அடிக்கடி மது வாங்கி கொடுத்து வந்தார். சில மாதங்களுக்கு முன் அந்த சிறுமியின் தந்தை இறந்த நிலையில், ராஜ்குமாரின் தொல்லை அதிகரித்தது.

இதுதொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுமி அளித்த புகாரின்பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக ராஜ்குமாரின் மனைவி சரிதாவும் இணைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் சிறுமியின் குடும்பம் மற்றும் தனது மனைவி உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 10ம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது தாய் லட்சுமி, பாட்டி ருக்கம்மா ஆகியோரை கொலை செய்தார். பின்னர் சிறுமியை தனது காரில் கடத்திச்சென்று அங்குள்ள புதர் நிறைந்த பகுதிக்கு இழுத்துச்சென்று அவரை பலாத்காரம் செய்து அதே இடத்தில் அவரையும் வெட்டி சாய்த்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத அவர் தனது வீட்டுக்கு சென்று மனைவி சரிதா மற்றும் 2 குழந்தைகளையும் சைக்கோ போன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார் .

பின்னர் தனது பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்ட ராஜ்குமார் மனைவி, குழந்தைகள் உட்பட 6 பேரை கொன்றது குறித்து கூறினார். அதன்பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்வதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

இதுகுறித்து ராஜ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் உடனடியாக போலீசார் சடலங்களை கைப்பற்றினர்.ஆனால் காரில் தப்பிச்சென்ற ராஜ்குமார் எங்கு பதுங்கியுள்ளார் என கடந்த 2 நாட்களாக வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே தலைமறைவான ராஜ்குமார், நந்திகம மண்டலத்திலுள்ள செகூர் புறநகரில் காரை விட்டுவிட்டு, ஸ்ரீசைலம் வழியாக நடந்து சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் அப்பகுதியில் போலீசார் நேற்று தீவிரமாக தேடிவருகின்றனர். கொலையாளி குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்ட்

தெலங்கானா மாநில காவல் ஆணையர் தருண்ஜோஷி நேற்று அளித்த பேட்டி: கொலையாளி ராஜ்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை சிறப்பு தனிப்படையினர் தேடிவருகின்றனர். அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவரின் விவரங்கள் யாருக்காவது தெரிந்தால், செவெல்லாவில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 8712665324 என்ற எண்ணில் அழைக்கலாம். அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்.

சிறுமியின் தந்தையை ராஜ்குமார் கொன்றார் என்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அவர் மாரடைப்பால் இறந்தார் என மருத்துவ அறிக்கையில் உள்ளது. போக்சோ வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காட்டியதாக ஷாபாத் எஸ்ஐ ரமேஷ் ஏற்கனவே சஸ்பெண்ட் ஆன நிலையில், இன்ஸ்பெக்டர் காந்தாரெட்டியும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் இழப்பீடு

இதனிடையே கொலையான சிறுமியின் உறவினர்கள் நேற்றுமுன்தினம் இரவு அங்குள்ள போலீஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கலெக்டர் நாராயணரெட்டி, விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: