‘‘ஆர்டர் கொடுத்த மகன்கள்’’ கொரியரில் வந்த போதை மாத்திரைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தாய்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை

பெரம்பூர்: கொரியரில் வீட்டுக்கு வந்த போதை மாத்திரைகள் அனைத்தையும் காவல்நிலையத்தில் தாய் ஒப்படைத்து உள்ளார். இதுசம்பந்தமாக ஒருவரை கைது செய்து 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை ஓட்டேரி, மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணா (42). நேற்று இவரது வீட்டுக்கு கொரியரில் வந்த பார்சலை சம்பூர்ணா பிரித்து பார்த்தபோது ஒருவித மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக ஓட்டேரி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று உதவி ஆய்வாளர் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பூர்ணாவின் மகன் ராஜ்குமார், விக்னேஷ், விஷ்ணு ஆகியோர் சேர்ந்து தடை செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் புக் செய்திருப்பது தெரிந்தது. இதுசம்பந்தமாக ஓட்டேரி, மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலையை சேர்ந்த விஷ்ணு (19) கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது நண்பர்கள் விக்னேஷ், ராஜ்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

பெரம்பூர், பழனியாண்டவர் கோயில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூர் ராஜாஜிதெரு பகுதியை சேர்ந்த சஜித் என்கின்ற மண்ட சஜித் (25), மதன்குமார் (23), கார்த்திக் என்கின்ற கமல் கார்த்திக் (26) ஆகிய 3 பேரை ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்து 26 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: