பதிவு, நிதி தொடர்பான ஆதாரங்களை வெளியிடாவிட்டால் ஆர்எஸ்எஸ் மீது சட்டப்படி நடவடிக்கை: கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே எச்சரிக்கை

பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். நிதி ஆதாரங்கள் குறித்து கேட்டிருந்தேன். இதற்குரிய ஆவணங்களை அவர்கள் காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது. அது பதிவு செய்யப்பட்ட அமைப்பா?. அதற்கான நிதி எங்கிருந்து வருகிறது. அதன் வரவு செலவு கணக்குகள் என்ன என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நான் கேட்டிருந்தேன்.

அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நான் கேட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. நூற்றாண்டு கால இந்திய வரலாற்றில் அவர்கள் ஒன்றும் தியாகிகள் இல்லை. எனவே அந்நிறுவன நிர்வாகிகள் நாக்பூரில் இருந்தோ, பெங்களூரு தலைமையகம் கேசவ கிருபாவில் இருந்ேதா நான் கேட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அமைப்பு என்பதால் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டுமா?. சரி கொடுப்போம். ஏனென்றால் ஆவணங்கள் இல்லை என்றால் உருவாக்க வேண்டும் இல்லையா?.

அவர்களால் எந்த ஆவணங்களையும் காட்ட முடியாது. அதற்கு காரணம் அவர்கள் வெளிப்படையாக இருக்க விரும்பவில்லை. சட்டத்தில் தனி அளவுகோலை கொண்டு அமைப்பை இயக்குகிறார்கள். அவர்களிடம் ஆவணங்கள் இருந்தால் என் முகத்தில் வீசி எறியட்டும். சட்டத்தை மீற நான் விடமாட்டேன். நான் அவர்களது அமைப்பு பதிவு தேதியை தெரிந்து கொள்ள கேட்கவில்லை. ஆர்எஸ்எஸ் யார் என்று தெரிந்து கொள்ள கேட்கிறேன். அவர்களுடன் நெடிய விவாதத்துக்கும் நான் தயார்’ என்றார்.

Related Stories: