புதுடெல்லி: அரியானாவில் உள்ள அரசு துறைகளின் வங்கி கணக்குகள் ஐடிஎப்சி பர்ஸ்ட் மற்றும் ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் செயல்பட்டு வருகின்றன. சண்டிகர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் துறைகளின் கணக்குகளும் இந்த வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த வங்கிக்கணக்குகளில் இருந்த 661 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
சில அரசு உயர் அதிகாரிகளின் உதவியுடன் வங்கி அதிகாரிகள் இடைத்தரகர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. அரசு கணக்குகளில் இருந்த பணம், பல்வேறு போலிகணக்குகள் மாற்றப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக அரியானா லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொருளாதார குற்றப்பிரவு போலீசார் விசாரித்து வந்தனர். பின் சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
ஐடிஎப்சி வங்கி முன்னாள் அதிகாரி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிஎப்சி பர்ஸ்ட் வங்கியில் பராமரிக்கப்பட்டு வந்த 60.54 கோடி ரூபாயை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் பங்கஜ் அர்வால் என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2000ம் ஆண்டைச் சேர்ந்த அரியானா கேடரை ஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த 2024 டிச.,10 முதல் 2025 ஜூன் 16 வரை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலராக இருந்தார்.
இதன் பிறகு ஜூன் 20 முதல் இந்தாண்டு மார்ச் 24 வரை விவசாயத்துறை செயலராக பதவி வகித்தார். அவர் பதவி வகித்த காலத்தில் மாநில அரசின் உத்தரவை மீறி வங்கியின் சண்டிகர் செக்டார் 32 கிளையில் கணக்குகள் திறக்கப்பட்டதுடன், பின் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நிதிபரிமாற்றம் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
