புதுடெல்லி: மேற்கு ஆசிய மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்காவும், ஈரானும் இறுதி செய்துள்ளன. இதனை தொடர்ந்து இந்தியா நோக்கி வரும் 11 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,‘‘இன்றைய நிலவரப்படி பாரசீக வளைகுடாப் பகுதியில் இந்தியக் கொடியுடன் கூடிய 10 கப்பல்கள் உள்ளன.
கூடுதலாக இரண்டு கப்பல்கள் அங்கு வந்துள்ளன. ஜூன் 17ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து இந்தியா நோக்கி 11 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுள்ளன. இந்த கப்பல்களில் தலா 2,85000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை ஏற்றிச்செல்லும் இந்தியக்கொடியுடன் கூடிய மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்கள், வெளிநாட்டுக்கொடியுடன் கூடிய ஒரு எல்பிஜி கப்பல், ஒரு கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் மற்றும் உரங்களை ஏற்றிச்செல்லும் வெளிநாட்டுக் கொடியுடன் கூடிய ஆறு சரக்கு கப்பல்கள் ஆகியவை அடங்கும். இந்தியக் கொடியுடன் கூடிய மீதமுள்ள கப்பல்களும் விரைவில் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
