வத்திராயிருப்பு, ஜூன் 11: வத்திராயிருப்பு அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வதாக சமூக வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு நியாய விலை கடைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலர், இந்த அரிசியை மொத்தமாக வாங்கி, வெளிமாவட்டத்திற்கு கடத்தி வருவதாக புகார் எழுந்து வருகிறது.
வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில், மூட்டை மூட்டையாக அரிசிகளை விலைக்கு வாங்கி வெளிமாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மகாராஜபுரம் பகுதியில் ஒரு வேனில், ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தி வெளியில் கொண்டு செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
