பாண்டியநாடு கூட்டுறவு நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கான சேர்க்கை: மண்டல இணைப்பதிவாளர் தகவல்

மதுரை, ஜூன் 11: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணைப்படி, மதுரை திருநகரில் உள்ள பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், 2026-27ம் கல்வி ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூலை 20ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 01.07.2026 அன்று குறைந்த பட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இணையதளத்தில் விண்ணப்பத்தை நிரப்பி, உரிய சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமோ ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்ப கட்டணம் ரூ.100, 2 ஆண்டு பயிற்சி கட்டணம் ரூ.20 ஆயிரத்து 750 ஆகியவற்றை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.

ஆண்டு தோறும் 2 செமஸ்டர்கள் என்ற முறையில், புதிய பாடத்திட்டத்தில் தமிழில் வகுப்புகள் நடத்தப்பட்டு, கொள்குறி வினா அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கும். கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் மற்றும் 0452-3551204 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இத்தகவலை மதுரை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: