மதுரை, ஜூன் 11: மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும், தினமும் 916 மெட்ரிக் டன் வரை குப்பைகள் சேரும் நிலையில், இவற்றை அகற்றுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கிடையே தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைகள், மாநகராட்சி பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தூய்மை பணிகள் தேக்கம் கண்டுள்ளன. இதற்கிடையே ஒன்றிய அரசின் ஆய்வுக்குழுவினர் சுகாதார நகரங்கள் தொடர்பான பட்டியல் கணக்கெடுப்பை ஒருசில நாட்களில் மதுரையில் நடத்த இருக்கிறது.
இந்நிலையில், மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் இரவில் குப்பை அகற்றும் நடவடிக்கைகளை தீவிரமாக துவக்கியுள்ளனர். இதுகுறித்து மதுரை மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் கூறும்போது, ‘‘மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத்திலும் தலா ஓரிடம் என, 5 இடங்களில் இரவில் குப்பை அகற்றும் பணிகள் மே 25ல் துவங்கி நடந்து வருகிறது.
இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை, குறிப்பிட்ட இடத்தில் துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வையாளர், தூய்மைப்பணியாளர்கள், பொக்லைன், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் களமிறங்கும் இவர்கள் குப்பையுடன், மண் குவியல், மரக்கழிவு, சாக்கடைக்கழிவுகளையும் அகற்றி வருகின்றனர். இவ்வகையில் கடந்த 17 நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் இருந்து, 3,262 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
