துறைமுகத்தில் கல்மார் வாகனம் மோதி பலி; தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

தண்டையார்பேட்டை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(24). இவர் வண்ணாரப்பேட்டையில் தங்கியிருந்து சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கு கன்டெய்னர்களை கையாளும் கல்மார்(கிரேன்) வாகனம் மோதி சம்பவ இடத்தில் பாலமுருகன் பலியானார்.

இந்நிலையில் நிர்வாகம் இழப்பீடு கொடுக்காததால் பாலமுருகனின் பிரேதத்தை ஸ்டான்லி மருத்துவமனையில் உறவினர்கள் வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் இந்த வழக்கு துறைமுக காவல் நிலையத்தில் உள்ளது, அங்கு செல்லுங்கள் என்றனர். அப்போது, ராஜாஜி சாலையில் பாலமுருகனின் சக தொழிலாளிகள் மற்றும் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துணை ஆணையர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: