சென்னை: சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த அகமது சித்திக் (45), கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து மறுவீடு சடங்கிற்காக அண்ணா சாலை அருகே உள்ள எல்லீஸ் சாலையில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்றபோது, உறவினர்களுக்கு பரிமாறுவதற்காக பெரம்பூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் ரூ.3500க்கு ஒரு பக்கெட் மட்டன் பிரியாணி வாங்கியுள்ளார்.
அப்போது உறவினர்களுக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் இறந்தபோன பூரான் கிடந்தததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பிரியாணி கடை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய பதிலை அளிக்காததால் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சித்திக் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், டி.ஆர்.சிவக்குமார் அமர்வு, உணவில் பூரான் கிடந்தது ஆரோக்கியமற்றது. புகார் அளித்தும் உரிய பதிலளிக்காதது சேவைக் குறைபாடு என்பதால், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடாகவும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் ரூபாயும் பிரியாணி கடை நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
