கோவை,ஜூன்9: கோவையில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் உஷா தலைமை வகித்தார். இதில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சமையல் எரிவாயு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டு இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, அமுதா, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணகி ஜோதிபாசு, சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
