கோவை, ஜூன் 13: கோவை வடகோவை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அறிவுறுத்தி உள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கோவை வடகோவை ரயில் நிலையத்திற்கு ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நுழைவு வாயில், கட்டடம், புதிய பிளாட்பார பணி, லிப்ட் உள்ளிட்ட ரயில் நிலையத்தை மேம்படுத்த கூடிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் பயன்பாடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வடகோவை ரயில் நிலைய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் எஸ்ஆர்எம்யூ நவீன், சேலம் கோட்ட துணை செயலாளர் ஜோன்ஸ், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் இருந்தனர்.
