மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14-வது வார்டு பாஜ கவுன்சிலராக உள்ளார். அதேபகுதியில் இவருக்கு சொந்தமாக பெட்டிக்கடை, பாறை உடைக்கும் வாகனம், கிணறு தோண்டும் வாகனம் உள்ளது. இந்தநிலையில், அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களியக்காவிளை காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டின் பின்னால் 27 டெட்டனேட்டர்கள், 30 ஜெலட்டின் குச்சிகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கவுன்சிலர் குணசீலன் மற்றும் வெடி பொருட்களை விற்பனை செய்த பனச்சமூடு பகுதியை சேர்ந்த ராஜன் (75) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
