அம்மா உணவகம் செயல்பாடு குறித்து அரசு டாக்டர்களிடம் தவெக எம்எல்ஏ ஆலோசனை: நெட்டிசன்கள் கிண்டல்

 

திருப்பூர்: திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலமுருகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அம்மா உணவக நிர்வாகத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளை அவர் நேரில் அழைத்து ஆலோசனை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை மருத்துவமனை வளாகத்திலேயே உள் நோயாளிகளுக்கு 3 நேரமும் உணவுகள் தயார் செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச்சூழலில், அம்மா உணவக குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை அணுகி ஆலோசிப்பதற்கு பதிலாக, மருத்துவ கல்லூரி அதிகாரிகள், மருத்துவர்களை எம்எல்ஏ பாலமுருகன் நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார். மருத்துவமனை நிர்வாகத்தினர், அம்மா உணவக செயல்பாடுகள் எங்களின் கட்டுப்பாட்டில் இல்லை, அது மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது என கூறினர். அதையும் பொருட்படுத்தாத எம்எல்ஏ, மருத்துவர்களின் அவசர பணி நேரத்தை கருத்தில் கொள்ளாமல், அவர்களை தன்முன்னே நிறுத்தி அம்மா உணவகம் தொடர்பாக நீண்ட ஆலோசனையும், அறிவுரைகளும் வழங்கியுள்ளார்.

அம்மா உணவகம் எந்த துறையின் கீழ் வருகிறது என தெரியாமல் வந்து சம்பந்தம் இல்லாத மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெறும் சோசியல் மீடியா கன்டென்ட்டுகளுக்காக மருத்துவர்களை அலைக்கழிக்கும் வகையில் இவர்களின் செயல்பாடு அமைந்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், எந்த துறையின் கீழ் அம்மா உணவகம் வருகிறது என்பது கூட தெரியாமல் எம்எல்ஏ ஆலோசனை நடத்தியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Related Stories: