சென்னை: தமிழக மருத்துவமனைகளில் இறப்பு சான்றிதழ் விரைவில் மற்றும் துல்லியமாக வழங்க தணிக்கை குழுவை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பிழைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. முழுமையற்ற சான்றிதழ்கள், தவறான இறப்பு காரணங்களை குறிப்பிடுதல் என பல நிலைகளில் இந்த தவறுகள் நடக்கின்றன. மருத்துவமனைகளில் இந்த தவறான ஆவணப்படுத்துதல் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்த தவறுகளை திருத்தி, சான்றிதழ்களின் துல்லிய தன்மையை அதிகரிக்க தணிக்கை முறை (MCCD Audit System) அவசியமாகிறது. இதற்காக ஐ சி எம் ஆர் – என் சி டி ஐ ஆர் (ICMR – NCDIR) வழிகாட்டுதல்களின்படி, மருத்துவமனை, மாவட்டம் மற்றும் மாநில அளவில் விரிவான தணிக்கை அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சமூக சுகாதார நிலையம், நகர்ப்புற சமூக சுகாதார நிலையகளில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் தணிக்கை குழுவும், தாலுகா மருத்துவமனைகள் , தாலுகா அல்லாத மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமையில் தணிக்கை குழுவும், மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமையில் தணிக்கை குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாதம் ஒரு முறை ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். 24 மணி நேரத்தில் துல்லியமாக சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தலைமையில் மாநில அளவிலான தணிக்கை குழு ஆண்டுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொடுத்த தகவலை ஆய்வு செய்யும்.
