சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2 வாரங்களுக்குள் 4வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை லிட்டருக்கு ரூ.105.31க்கு விற்பனையான பெட்ரோல் நேற்று ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77 ஆகவும், டீசல் ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே மாதத்தில் தொடர்ந்து பலமுறை எரிபொருள் விலை உயர்த்தப்படுவது சாதாரண மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பொருளாதார தாக்குதலாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகள், சிறு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி விலை உயர்த்தும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விலை நிலைத்தன்மைக்கான தனி கொள்கையை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.
