மும்பை: மும்பையில் நேற்று நடந்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் 37வது ஆண்டு விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், “கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் உரங்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த போர் வெறும் உலக அரசியலில் மட்டுமின்றி, சாதாரண வணிகங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கப்பல் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டு சரக்கு கட்டணங்கள் உயரும், மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் மற்றும் ஏற்றுமதியில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழல் உருவாகி இருக்கிறது. சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.8.1 லட்சம் கோடி நிலுவைத் தொகையை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் 15 நாள்களுக்குள் விரைந்து வழங்க வேண்டும். இந்திய பொருளாதாரம் முற்றிலும் சரிந்து விட்டது போன்ற ஒரு அவநம்பிக்கையான பிம்பங்களை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்” என்றார்.
