கவுஹாத்தி: அசாம் முதல்வராக பாஜ தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 13ம் தேதி இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று அசாம் சட்டப்பேரவை கூடியது. அப்போது பொது சிவில் சட்ட மசோதா 2026 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், ரைஜோர் தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா குறித்து பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “பொது சிவில் மசோதா விவாகரத்து, வாரிசு மற்றும் லிவ் இன் உறவுகளை நிர்வகிக்கும் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
முக்கியமாக, திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது, பலதார மண தடை, பெற்றோரின் சொத்தில் மகள்களுக்கு சம உரிமை மற்றும் திருமணம் செய்து கொள்ளாது இணைந்து வாழும் உறவுகள் தொடர்பான நான்கு விவகாரங்களை உள்ளடக்கி இருக்கும்” என்றார். இருப்பினும் அசாமில் வசிக்கும் எந்தவொரு பழங்குடியினத்தவருக்கும் இந்த மசோதா பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் மசோதா நாளை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
