திருமங்கலம்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் கவிதா (27). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த காளியப்பன் (31) என்பவருக்கும் திருமணமாகி சங்கர் (9) சஞ்சீதா (3) என 2 குழந்தைகள் உள்ளன. காளியப்பன் கூலி வேலை செய்து வந்தார்.
தம்பதியிடையே குடும்ப தகராறு ஏற்படவே கணவருடன் கோபித்து கொண்டு, குழந்தைகளுடன் கவிதா சிவரக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டை விட்டு வந்த தன்னை கணவர் பார்க்க வராததால் மனவருத்தத்தில் இருந்தார்.கவிதாவின் தந்தை ஆறுமுகம், பேரன் சங்கரை அழைத்துக் கொண்டு நேற்று வெளியே சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த கவிதா, குழந்தை சஞ்சீதாவுடன் வீட்டின் அருகே இருந்த 50 அடி ஆழ கிணற்றிற்கு சென்றார். அங்கு குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, வேக வேகமாக வீட்டிற்குள் வந்து அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த கள்ளிக்குடி போலீசார், கவிதாவின் உடலை மீட்டனர். வீட்டிலிருந்த பெண் குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. அருகில் இருந்த கிணற்றில் இறங்கி தேடியபோது குழந்தை சஞ்சீதாவின் உடல் கிடைத்தது. சிறுவன் சங்கர் தாத்தாவுடன் வெளியே சென்றதால் உயிர் பிழைத்தான்.
