சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடைக்காலத்தில் பெய்யும் மழையில் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். அவர்களின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. குறிப்பாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடிய நிலையும் உருவாகும். இந்நிலையில் விவசாயிகள் மழைப்பாதிப்பை சமாளிப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.
கோடை மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், குடியிருப்போர் பாதிக்கப்படுவதும், கழிவுநீர் குடிநீரில் கலப்பதும், வழக்கமானது என்றாலும் கூட தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது மக்களின் பாதுகாப்பான, சுகாதாரமான குடியிருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மழையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். தொடர்ந்து வரும் நாட்களில் கோடைமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருக்குமேயானால் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பிற்கும், சிரமமில்லா போக்குவரத்திற்கும் முன்னேற்பாடான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
