புதுடெல்லி: ஹார்முஸ் நீரிணை அருகே படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி உயிரிழந்தார். மேலும் படகில் இருந்த 18 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் போக்குவரத்துக்கு முக்கியமானது ஹார்முஸ் ஜலசந்தியாகும். உலகின் எண்ணெய் விநியோகத்தில் கணிசமான பங்கு இந்த பகுதி வழியாகவே செல்கிறது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போருக்கு பின் தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
ஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்தும் மற்றும் ஈரானிய எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு படகு நேற்று தீப்பிடித்தது. இதில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். அந்தப் படகில் இருந்த 18 இந்திய மாலுமிகளை, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல் மீட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தகவல்களின்படி, காயமடைந்த மாலுமிகள் துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், தங்கள் அதிகாரிகள் மீட்கப்பட்ட இந்திய மாலுமிகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் படகு உரிமையாளருடன் தொடர்பில் இருப்பதோடு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என கூறியுள்ளது.
