புதுடெல்லி: ஒரே ஏவுகணை மூலம் பல்வேறு இலக்குகளை தாக்கக் கூடிய எம்ஐஆர்வி திறன் கொண்ட மேம்பட்ட அக்னி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில், எம்ஐஆர்வி அமைப்புடன் கூடிய மேம்பட்ட அக்னி ஏவுகணை சோதனை மே 8ம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்ட இலக்குகளை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது’’ என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ஏவுகணைகள் ஒரே ஒரு இலக்கை தாக்கி அழிக்கக் கூடியவை. எம்ஐஆர்வி சிறப்பம்சத்துடன் இருக்கும் இந்த மேம்பட்ட அக்னி ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடியது. இதனால் இது எதிரி நாடுகளின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
