புதுடெல்லி: தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கையை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாஜ அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என சிறப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, டெல்லியில் உள்ள பாஜ அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் அமைந்துள்ள பாஜவின் டெல்லி அலுவலகம் மற்றும் கட்சியின் தலைமையகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சத்தை உருவாக்கும் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்காக, பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாதக் குழு பிடிபட்ட சில வாரங்களுக்குப் பிறகு, பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழுக்களுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுக்கள் சமீபத்தில் பிடிபட்டதை அடுத்து, காவல்துறை சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் டெல்லி காவல்துறை பதற்றமான மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. டெல்லியின் பல முக்கிய இடங்களில் விரிவான சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
