புதுடெல்லி: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடர்பாக, மும்பையில் உள்ள 17 வளாகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.சிபிஐ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களின் இயக்குனர்களின் குடியிருப்பு வளாகங்களிலும், வங்கி நிதியைத் திசைதிருப்புவதற்காகக் கணக்குகள் பயன்படுத்தப்பட்ட இடைத்தரகு நிறுவனங்களின் அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதியால் 8 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தேடுதல் ஆணைகளின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டு, குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ஒரே முகவரியிலிருந்து பல இடைத்தரகு நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததும் சோதனைகளில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பான வழக்கில் பல்வேறு பொதுதுறை வங்கிகள்,எல்ஐசி அளித்த புகார்களில் இதில் ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.27,337 கோடி என தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
