குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு

 

குன்னூர், மே 9: குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவுபெற்றது. 35 நாட்கள் நடைபெற்ற உற்சவம் முடிவடைந்தன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோயிலின் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 35 நாட்களாக நடைபெற்று வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விழாவில், நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்றன. குறிப்பாக பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய பக்தி பரவசமான நிகழ்வு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி, குன்னூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருதல் நடந்தது.
கண்கவர் மலர் அலங்காரங்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கு மற்றும் புஷ்பப் பல்லக்கு ஊர்வலங்கள் நகரை விழாக்கோலமாக மாற்றின. இந்த ஆண்டு திருவிழாவில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
35 நாட்களாக திருவிழா களை கட்டியிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி கட்ட பூஜைகளுடன் விழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: