திண்டிவனம், மே 5: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் 21வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் விசிக வேட்பாளர் வன்னி அரசு, அதிமுக வேட்பாளர் அர்ஜுனன் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அர்ஜுனன் 62260 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் வன்னி அரசு 62997 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அப்போது கள்ளக்கொளத்தூர், அனுமந்தைகுப்பம் ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் அந்த இயந்திரங்களின் உறுதிச் சீட்டு விவி பேடு பெட்டியை திறந்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ரசீதுகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதனால் இறுதி முடிவு வெளியாவதில் 2 மணி நேரத்திற்கு மேலாக இழுபறி நீடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வன்னி அரசு 63833 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் அலுவலர் ஆகாஷ் அறிவித்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் 63099 வாக்குகள் பெற்று 734 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதே போல் தவெக வேட்பாளர் சக்திவேல் 61159 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
