பண்ருட்டியில் பரபரப்பு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட ரூ.5.34 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி, ஏப். 22: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மணப்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் இலக்கியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் இலக்கியா மற்றும் போலீஸ் ஏட்டு சத்தியவாணி, வீடியோ, போட்டோ டீமுடன் அங்கு சென்றனர். அப்போது பறக்கும் படையினரை கண்டதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த கும்பல் அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய அவர்கள் கொண்டு சென்ற ரூ.5.34 லட்சம் ரொக்கம் மற்றும் டோக்கன்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், பண்ருட்டி தாசில்தாருமான பலராமனிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: