பாகூர், ஏப். 29: புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணிச்சூழல் காரணமாக அவ்வப்போது மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் புதுச்சேரி வடமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவரால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படவே, கடந்த 2 வாரமாக மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மணிகண்டன் வசித்து வந்த அதே தெருவில் வசந்தராஜா(47) என்பவரும் வசித்து வருகிறார். இவரது மனைவி ராஜம்(40). டைல்ஸ் போடும் தொழிலாளியான வசந்தராஜா, பாகூர் மற்றும் கடலூர் ஒட்டியுள்ள பகுதிகளில் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஒரே தெரு என்பதால், இவரது வீட்டில் அவ்வப்போது மணிகண்டன் வந்து பேசிவிட்டு உணவு சாப்பிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நாளடைவில் மணிகண்டனுக்கும், ராஜத்திற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த வசந்தராஜா, மனைவியை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக வசந்தராஜாவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 2 மாதமாக வசந்த ராஜா, தனது மனைவியிடம் இருந்து பிரிந்து அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனின் பைக்கை எடுத்து வசந்தராஜா அடமானம் வைத்து வீண் செலவு செய்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வசந்த ராஜாவுக்கும், மணிகண்டனுக்கும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் தரப்பில் ஒரு வாரத்துக்கு முன் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மனைவியுடன் கள்ளக்காதலால் ஆததிரத்தில் இருந்த வசந்தராஜா, நேற்று அதிகாலை 5 மணியளவில், கூர்மையான கடப்பாரையை எடுத்து வந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் மணிகண்டன் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து அவரது தம்பி சேது வெளியே ஓடி வந்துள்ளார். இதனைப் பார்த்த வசந்தராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் படுகாயமடைந்த மணிகண்டனை, உறவினர்கள் அங்கிருந்து ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.இதுகுறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் சேது புகார் அளித்தார். தெற்கு எஸ்பி சுப்பிரமணி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சஜித், எஸ்ஐ சண்முகசத்யா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து வசந்தராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
