ஸ்ரீநகர்: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பாதித்தால், அது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வாக்கு திருட்டு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மூலம் நடக்கவில்லை, மாறாக தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகளின் மூலமாகவே நடக்கிறது. எஸ்ஐஆர் பணி தேர்தல் முடிவை பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கி தேர்தலில் முறைகேடு செய்யும் முயற்சியில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இது எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் மிகப்பெரிய சவாலாகும்” என்று குறிப்பிட்டார். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து பேசிய அவர், ”திங்கள்கிழமை தேர்தல் முடிவுகள் வரும்போது மேற்கு வங்க தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜவே வெற்றி பெறும் என கூறின. ஆனால் முடிவு என்னவானது? முடிவுகள் வெளிவரும் வரை காத்திருப்போம். முடிவுகள் தமக்கு பிடிக்கவில்லை என்பதால் ஒருவர் தமது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடவே மறுத்துவிட்டார்” என்றும் அவர் தெரிவித்தார்.
