புதுடெல்லி: கடந்த 1956ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி நிறுவப்பட்ட அமலாக்கத்துறையானது டெல்லியில் 70வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இந்த விழாவில் பேசிய அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவீன் கூறுகையில்,”திவால் மற்றும் ஐபிசி சட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டதன் காரணமாக வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான மோசடிகள் குறைந்துள்ளது. 2025-2026ம் நிதியாண்டில் அமலாக்கத்துறை 812குற்றப்பத்திரிக்கைகளையும், 155 கூடுதல் குற்றப்பத்திரிக்கைகளையும் தாக்கல் செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்டவற்றின் எண்ணிக்கையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். அமலாக்கத்துறையின் குற்ற நிரூபண விகிதம் 94 சதவீதம் ஆகும். 2400 பணமோசடி வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு நிலுவையில் உள்ளது. நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.63,142கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை மீட்டு திருப்பி அளித்துள்ளது ” என்றார்.
