திருச்சி, ஏப். 19: திருச்சி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தமாக 8,305 பேர் தபால் வாக்கு செலுத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வரும் 23ம்தேதி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு செலுத்த அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வாக்கு சேகரிக்கப்பட்டு வந்தது. இதற்காக கடந்த 17ம்தேதி வரை அஞ்சல் வாக்கு பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் 85 வயதிற்கு மேற்பட்டோர் 4,948 பேரும் மாற்றுத்திறனாளிகள் 3 ஆயிரத்து 646 பேரும் என மொத்தமாக 8,594 பேரிடமிருந்து தபால் வாக்குகள் செலுத்த 12 டி படிவம் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 13ம்தேதி முதல் இறுதி நாளான 17ம்தேதி வரை மொத்தமாக 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 4,724 பேரும் மாற்றுத்திறனாளிகள் 3 ஆயிரத்து 581 பேரும் என மொத்தம் 8,035 பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். இத்தகவலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
