சமயபுரம், ஏப்.19: மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையில் சட்ட விரோதமாக தமிழக மதுபான பாட்டில்களை சாக்குப் பையில் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக நேற்றிரவு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா தலைமையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேஷ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, எதுமலை பிரிவு சாலையில் அடர்ந்த காட்டு பகுதியில் 2 சாக்கு பைகளில் மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 90க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேஷ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த நபரிடம் விசாரித்து வருகின்றனர்.
