கால்பந்து உலகில் புதிய நாயகன்; ஹாலண்ட் பெயரை சூட்டும் பெற்றோர்

 

மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில் நடக்கும் பிபா உலகக்கோப்பை கால்பந்து 23வது சீசனில், ரசிகர்களின் மனதை கவர்ந்த வீரர்களில் நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் (25) முக்கியமானவராக உள்ளார். இவர், ஈராக்கிற்கு எதிராக 2, செனகல்லுக்கு எதிராக 2, ஐவரிகோஸ்ட்டிற்கு எதிராக 1, பிரேசிலுக்கு எதிராக 2 என மொத்தம் 7 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். அதிலும், நாக்அவுட் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை வீழ்த்தி, வீட்டிற்கு அனுப்ப காரணமாக எர்லிங் ஹாலண்ட் இருந்தார். தற்போது வரை அதிக கோல் அடித்த வீரர்களின் வரிசையில் பிரான்சின் எம்பாப்வே (8 கோல்), அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (8) ஆகியோருக்கு பின் 3வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான காலிறுதியில் நார்வே தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறியிருந்தாலும், தனது அசாத்தியமான ஆட்டத்தால் எர்லிங் ஹாலண்ட்டின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கால்பந்து உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்வேக்கு பின் புதிய நாயகனாக அவர் தென்படுகிறார். தென்அமெரிக்க நாடான பெருவிலும் எர்லிங் ஹாலண்ட்டின் புகழ் பரவியுள்ளது. அங்குள்ள பெற்றோர், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஹாலண்ட்டின் பெயரை சூட்டி வருகின்றனர். இதுவரை 559 குழந்தைகளுக்கு எர்லிங் ஹாலண்ட் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில், 468 பேருக்கு ஹாலண்ட் என்றும், 91 பேருக்கு எர்லிங் ஹாலண்ட் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரு நாட்டில் நட்சத்திர கால்பந்து வீரர்களின் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவது புதிதல்ல. ஏற்கனவே நெய்மரின் பெயர் அதிகபட்சமாக 33,809 பேருக்கும், மெஸ்ஸி பெயர் 3,402 பேருக்கும், ரொனால்டோ பெயர் 1,185 பேருக்கும், யமால் பெயர் 1,241 பேருக்கும் சூட்டப்பட்டுள்ளது.

Related Stories: