மணப்பாறை, ஜூலை 13: திருச்சி அருகே கடனை திருப்ப செலுத்தாதவரை கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்தவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அனியாப்பூரை சேர்ந்தவர் ராசு மகன் காளிதாசன்(18). இவர் அருகேயுள்ள சந்தைப்பேட்டையில் உள்ள ஒரு சில்லி சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சேட்டு மகன் மகேஸ்வரன்(37) என்பவரிடம் ரூ.1,00,000 (ஒரு லட்ச ரூபாய்) வட்டிக்கு கடனாக வாங்கி உள்ளார்.
இதில் ரூ.50,000 திருப்பி தந்துவிட்ட நிலையில் மீதமுள்ள ரூ.50,000-யை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பலமுறை பணத்தை கேட்டும் காளிதாசன் திருப்பி தர இழுதடித்து வந்ததால், கோபமடைந்த மகேஸ்வரன், கடந்த 10ம் தேதி மதியம் 2மணிக்கு, காளிதாசன் வேலை செய்யும் கடைக்கு சென்றவர், தரவேண்டிய ரூ.50,000-யை இப்போதே தர வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் காளிதாசனை அடித்தது மட்டுமின்றி, அங்கு கறிக்கடையில் வைத்திருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து காளிதாசனை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து காளிதாசன் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்துள்ள வையம்பட்டி போலீஸார் மகேஸ்வரனை நேற்று கைது செய்தனர்.
