துவரங்குறிச்சி, ஜூலை 9: வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை 20 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவின் படி அகற்றப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த தெற்கு எல்லைக்காட்டுப்பட்டி பகுதியில் வேலமலை அடிவாரத்தில் சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8.5 ஏக்கரை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி வனத்துறையினர் நீதிமன்றத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்கு பதிந்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது .
கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வே எண் 349/2 உள்ள இடம் வனத்துறையினருக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலர் சரவணகுமார் மற்றும் மணப்பாறை வனத்துறை அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனத்திட்ட அலுவலர் மற்றும் மருங்காபுரி வருவாய்த் துறையினர் இணைந்து இடத்தை அளக்கும் பணி நடைபெற்றது.
