சேலம், ஜூலை 9: சேலம் மாவட்டத்தில் உர விற்பனையின் போது தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்ய கூடாது என, வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றாக விவசாயம் உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் பணிகளிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, கரும்பு மற்றும் தென்னை ஆகிய பயிர்களை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் யூரியா விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்குத் தேவையான ரசாயன உரங்களான யூரியா 5,993 மெ.டன், டிஏபி 1,931 மெ.டன், பொட்டாஷ் 1,518 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 8,641 மெ. டன், சூப்பர் பாஸ்பேட் 1,093 மெ.டன் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
