சேலம், ஜூலை 3: வாழப்பாடி அருகே நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள கல்வராயன் மலையில் உள்ள கரியகோயில் பகுதியில் நேற்று, சிறப்பு எஸ்ஐ செல்வம் தலைமையிலான போலீசார், கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அதில், சூலாங்குறிச்சி தலைக்கரை மலைக்கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, போலீசாரை பார்த்ததும் ஒருவர் ஓட்டம் பிடித்தார். உடனே அவரை மடக்கி பிடித்து வந்து விசாரித்தனர்.
அதில் அவர், அக்கிராமத்தை சேர்ந்த ராமன் (61) எனத்தெரியவந்தது. தனது காட்டில் உள்ள கொட்டகையில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து விடுவீர்கள் என்ற பயத்தில் ஓடியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். உடனே அந்த கொட்டகையில் சோதனையிட்டு, அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, வழக்குப்பதிந்து கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
