சேலம், ஜூலை 2: சேலம் மாநகராட்சி சூரமங்கலம் பழைய மண்டல வார்டு அலுவலகத்தில் நேற்று மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் ஆய்வு செய்தார். அப்போது, தூய்மை பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையில் தினசரி வருகை பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்த கமிஷனர், வீடுகளில் குப்பை சேகரிக்கும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். குப்பை சேகரிக்கும்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சேகரிக்க வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், 21வது வார்டு அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு பயன்பெறும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் ஆகியவற்றின் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு, உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார். இந்திரா நகர் கிழக்கு குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டார். கந்தம்பட்டி பைபாஸ் கோனேரி கரை தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும் என உதவி செயற்பொறியாளருக்கு உத்தர விட்டார். 25வது வார்டு பள்ளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தானியங்கி தகன மையத்தை நேரில் பார்வை யிட்டார். இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் ராம்குமார், உதவி செயற்பொறியாளர் ஓபுளிசுந்தர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
