நாமக்கல், ஜூன் 25: நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில், கமிஷனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி நேற்று முதலைப்பட்டியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் பொருட்கள் பாதுகாப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சி கொசவம்பட்டியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடுகளில் குப்பை சேகரிப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.
அப்போது, பொதுமக்களிடம் குப்பைகளை 4 விதமாக தரம் பிரித்து கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், அனைத்து குடியிருப்புகளுக்கும் சென்று குப்பைகளை பெறவேண்டும் என தூய்மை பணியாளர்களை கமிஷனர் அறிவுறுத்தினார். கொசவம்பட்டி பகுதியில் உள்ள குப்பைகள் சேகரிப்பு மையங்களை பார்வையிட்டு, மேற்கொள்ளவேண்டிய சுகாதார பணிகள் குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
