ராசிபுரம், ஜூன் 19: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரத்தினம் (61). கடந்த 14ம் தேதி மாலை, ரத்தினம் மல்லூரில் உள்ள தனது மூத்த மகள் விஜயலட்சுமி வீட்டிற்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக, பக்கத்து வீட்டுக்காரர்கள், ரத்தினத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஊருக்குத் திரும்பிய ரத்தினம், வீட்டைச் பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த அரை பவுன் தங்கத் தாலி மற்றும் கால் பவுன் தங்கத் தோடு, ரூ.2 ஆயிரத்தை திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
