பட்டாசுகளை வீட்டில் பதுக்கியதால் நடந்த வெடிவிபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்


லக்னோ: உத்தரபிரதேசத்தில் பட்டாசுகளை வீட்டில் பதுக்கியதால் நடந்த வெடிவிபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர். உத்தரபிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் அடுத்த நவ்ஷேராவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால், அருகில் உள்ள வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து தரைமட்டமானது. வீட்டில் இருந்த பலர் இடிபாடுகளுக்குள் புதையுண்டனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று வயது சிறுமி, அவரது ஒன்றரை வயது சகோதரன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஆக்ரா ரேஞ்ச் ஐஜி தீபக் குமார் கூறுகையில், ‘வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தின் தாக்கத்தால் அருகில் இருந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 பேரை போலீசார் மீட்டனர். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சிலர் புதைந்து இருக்க வாய்ப்பு உள்ளதால், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ என்றார்.

The post பட்டாசுகளை வீட்டில் பதுக்கியதால் நடந்த வெடிவிபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: