டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ச்சி பெற்று பணிநியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.06.2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1இல் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 துணைப்பதிவாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். பணிநியமன ஆணைகளை பெற்றவர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கூட்டுறவுத் துறையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மண்டல கூடுதல் பதிவாளர் / இணைப்பதிவாளர்கள் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு 300 துணைப்பதிவாளர் பணியிடங்கள் பணிநிலைத் திறனின்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களாகும்.

இவை தொகுதி-1ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பணியிடங்களாகும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் பணிகளான சரகத் துணைப்பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களாகவும், வணிக நோக்கம் கொண்ட கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்களாகவும் பணிபுரிவார்கள். இவர்கள் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்தல், கூட்டுறவுச் சங்கங்களின் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் அதன் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்வார்கள்.

இப்பணியிடங்களில் காலியாக இருந்த 13 துணைப்பதிவாளர் பணியிடங்களுக்கு உரிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டு இப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண். 16/2022 நாள் 21.07.2022-ன் படி அறிக்கை வெளியிடப்பட்டு 13 பணியிடங்கள் கூட்டுறவுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்டவாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி-1இல் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 தேர்வாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கரங்களால் இன்று (25.06.2024) துணைப்பதிவாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையினை பெற்றுக்கொண்டனர்.

பின்னர், பணிநியமன ஆணைகளை பெற்றவர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அதுசமயம், கூட்டுறவுத்துறை அமைச்சர் , பணிநியமன ஆணைகளை பெற்றவர்களிடம் தெரிவித்ததாவது, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணக்கிணக்க, செயாலாற்றி ஏழை, எளிய மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. துணைப்பதிவாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம், பொது மக்களுக்கு விரைந்த சேவைகள் வழங்க ஏதுவாக அமையும் என்ற நோக்கத்துடன் இப்பணியிடங்கள் நிரப்ப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞரின் கூற்றுப்படி, தனி முயற்சியை விட கூட்டுறவு முயற்சியே சிறந்த பலனளிக்கும். எனவே, தாங்கள் அனைவரும் கூட்டுறவின் சிறப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிகழ்வின் போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர்.கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.ந.சுப்பையன் , கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி ஆகியோர் உடனிருந்தனர்.

The post டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ச்சி பெற்று பணிநியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: