வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களை வைத்து கொண்டு ஜி-பே மூலம் அண்ணாமலை பணம் சப்ளை: ஆதாரத்துடன் கலெக்டரிடம் திமுக புகார்

திமுக கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பத்ரி (எ) பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கோவை அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள பாஜ தேர்தல் அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களை தொடர்பு கொண்டு தாமரைக்கு வாக்களிக்க பிரசாரம் செய்கிறார்.

மேலும், கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, 18ம் தேதி மாலையுடன் தொகுதிக்கு சம்மபந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்ட விரோதமாக பாஜ தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அங்கேயே தங்கி இருந்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க கோரியும், ஜி-பே மூலமாக பணம் விநியோகம் செய்தும் வருகின்றனர்.

அதன்படி, சென்னையை சேர்ந்த ஜெயபிரகாஷ், அவரின் மைத்துனரான கரூரை சேர்ந்த சிவக்குமார், பணிமனையில் பணிபுரியும் வெளியூரை சேர்ந்த கிரண்குமார், ஆனந்த், பிரசாந்த், சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் பணிமனையில் தங்கியுள்ளனர். எனவே, சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிமாவட்டத்தினரை தொகுதியை விட்டு வெளியேற்றியும், வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் விநியோகிப்பவர்கள் மீதும், இவர்களை வழி நடத்தும் பாஜ வேட்பாளர் அண்ணாமலை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

* ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன்னு சொன்னாரே..
.
கோவையில் பாஜ வேட்பாளராக களமிறங்கி உள்ள மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டுக்கு ஒரு ரூபாய் தர மாட்டேன் என்று கூறினார். ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கியபோது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டுக்கு அடியில் ரூ.500 நோட்டை கொடுத்து சிக்கினார். தற்போது ஓட்டுக்கு ரூ.2000 வழங்க சென்ற பாஜ நிர்வாகி ஜோதிமணி பூத் சிலிப், பாஜ கொடி, கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கி உள்ளார்.

இதுதவிர வாக்காளர்களுக்கு ஜி-பே மூலம் அண்ணாமலை பணம் விநியோகம் செய்வதாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை யார் யாரெல்லாம் அனுப்புகிறார்கள் என்ற ஆதாரத்துடன் திமுகவினர் புகார் அளித்து உள்ளனர். தினமும் ஒரு பொய்க்கு பெயர் போன மன்னன் அண்ணாமலை ஜனநாயகத்தை நிலை நாட்டாமல் காசு கொடுத்து ஓட்டு வாங்குவது வெட்கக்கேடானது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

The post வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களை வைத்து கொண்டு ஜி-பே மூலம் அண்ணாமலை பணம் சப்ளை: ஆதாரத்துடன் கலெக்டரிடம் திமுக புகார் appeared first on Dinakaran.

Related Stories: